ஷா ஆலம், ஆக 8- தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின்
பணிகளை எதிதாக்கும் வகையில் சேவையை முழுமையாக இலக்கவியல்
மயமாக்குவதற்கு சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசு தயாராக உள்ளது.
அதி முக்கியம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு
காண்பதற்கு ஏதுவாக ஓரிட மையத்தை உருவாக்குவதன் மூலம் ஊராட்சி
மன்றங்களின் சேவையும் வலுப்படுத்தப்படும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கித்தா சிலாங்கூர் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள மூன்றாவது
அம்சமான அரசாங்கச் சேவையை துரிதமானதாகவும் திறன்மிக்கதாகவும்
ஆக்கும் நோக்கத்திற்கேற்பவும் அரசு சேவையில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பொது மக்கள் சிறப்பான சேவையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக
அரசு சேவையை முழுமையாக இலக்கவியல் மயமாக்குவதற்கு ஒற்றுமை
அரசு தயாராக உள்ளது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்
நடப்பு மேம்பாட்டைத் தொடரும் வகையில் பல்வேறு துறைகளை
உள்ளடக்கிய கித்தா சிலாங்கூர் தேர்தல் கொள்கையறிக்கையை மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 31ஆம் தேதி
வெளியிட்டார்.
ஐந்து அடிப்படை கூறுகளைக் கொண்ட அந்த அறிக்கையின் முக்கியமான
சில அம்சங்களை மாநில அரசு முதலாவது சிலாங்கூர் திட்டத்தின்
வாயிலாக ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.