கோலாலம்பூர், ஆக 9- பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்த வரை நாடு சரியான தடத்தில் முன்னோக்கிப் பயணிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நேற்று சிரம்பான், பாரோய் அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் இதரத் தலைவர்களும் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் இவ்விவகாரம் தொட்டு தாம் பேசியதாக அன்வார் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நோக்கத்திற்காக பல்வேறு கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்.
வெளிப்படைப் போக்கைப் பற்றி பேசிக் கொண்டும் செயலில் வெளிப்படைப் போக்கு இல்லாமலும் இருக்கும் தரப்பினரிடமிருந்து நாட்டை காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் நமக்கு வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமை மற்றும் பொருளாதார மேம்பாட்டின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் மக்களின் ஆற்றல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி அனைத்து இன மக்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.