NATIONAL

ஒன்பது வயது மகனைக் கொன்றதாகத் தாய் மற்றும் அவரது காதலன் கைது

தைப்பிங், ஆகஸ்ட் 11 – கடந்த மாதம் தனது ஒன்பது வயது மகனைக் கொன்றதாகத் தாய் மற்றும் அவரது காதலன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நூர் அதிகா சபாரி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டபோது, சித்தி ஃபரினா மொஹமட் பஷரோல் அரிஃபின் (36), மற்றும் இசுஹைசாத் இஸ்மாயில் (37) ஆகியோர் புரிந்துகொண்டு தலையசைத்தனர்.

ஒரு கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இக்குற்றச்சாட்டு அமைந்துள்ளது மற்றும் அதே சட்டப்பிரிவு 34 உடன் சேர்த்து வாசிக்கப்பட்டது, மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்பு அடிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஜூலை 31 அன்று, அஸ்ஸாம் கும்பாங்கில் உள்ள வீடு ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து பொது மக்களால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஒன்பது வயது சிறுவன் இறந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர் நடத்திய முதல் கட்ட பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் மீது துஷ்பிரயோகம் நடந்ததற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொலைக்கான விசாரணையில் உதவுவதற்காக அதே வீட்டில் வசிக்கும் சிறுவனின் தாயையும் அவரது காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

– பெர்னாமா


Pengarang :