ஷா ஆலம், ஆக 18- இங்குள்ள எல்மினா சென்ட்ரல் பார்க், செக்சன் யு16இல் நேற்று மதியம் நிகழ்ந்த இலக ரக விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் அவர்கள் மன உறுதியுடன் இருப்பதற்கும் துயரில் இருந்து மீள்வதற்கும் தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும் தேவையற்ற ஊகங்கள் பரவுவதை தடுக்கவும் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட இறந்தவர்களின் படங்களை பகிர்வதை தவிர்க்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விமான விபத்தில் பிரமுகர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் இரு விமானப் பணியாளர்கள், ஆறு பயணிகளோடு விபத்து நிகழ்ந்த போது சாலையில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரும் பலியானதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மேலாண்மைப் பிரிவின் தலைவர் முகமது ஷோக்கி ஹம்சா கூறினார்