ஷா ஆலம், ஆக 2- செராஸ், தாமான் மேகாவில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த இரட்டை மாடி வரிசை வீட்டின் படிக்கட்டுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த மின்சார சாதனத்தில் ஏற்பட்ட தீ இந்த மரண விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இத் தீச்சம்பவம் தொடர்பில் எங்களுக்கு அதிகாலை 2.18 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்தது. இத்தீயினால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு 3 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டது. அவ்வீட்டிலிருந்த கணவன்-மனைவி இருவரும் தீக்காயங்களுக்கும் மூச்சுத் திணறலுக்கும் ஆளாகினர் என்று அவர் சொன்னார்.
நாற்பது மற்றும் 50 வயதுடை அத்தம்பதியர் உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என அவர் மேலும் தெரிவித்தார்.