MEDIA STATEMENTNATIONAL

தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் 11 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்

லஹாட் டத்து, செப் 24- பதினோரு வயது சிறுவன் ஒருவன் தலை, கழுத்து மற்றும் கைகளில் பலமான வெட்டுக்காயங்களுக்குள்ளாகி பரிதாபமாக உயிழந்தான். இந்த கொடூரச் செயலைப் புரிந்தவன் அந்த சிறுவனின் வளர்ப்புத் தந்தையின் நண்பன் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இங்குள்ள பெல்டா சஹாபாட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்ததாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரோஹான் ஷ அகமது கூறினார்.

அந்நிய நாட்டினரான அச்சிறுவனின் வளர்ப்புத் தந்தை மற்றும் தாய் இருவரும் 33 வயதுடைய சந்தேகப்பேர்ழியின் பராமரிப்பில் அச்சிறுவனை விட்டு விட்டு வேலைக்குச் சென்றிருந்த போது இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தலையின் முன்புற மற்றும் பின்புற பகுதிகள் மற்றும் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடனும் இடது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையிலும் அச்சிறுவனின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அதே தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்தோனேசியப் பிரஜையான அந்த சந்தேகப் பேர்வழியை தேடும் நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகப் பேர்வழி தலைமறைவாகிவிட்டான். கொலைக்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பெல்டா சஹாபாட் வட்டார மக்கள் அது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :