கோலாலம்பூர், அக்.2 - கியூபாவின் குவாண்டனாமோபே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான பரிந்துரை இன்னும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதால் அரசாங்கம் அது குறித்து இன்னும் எந்த முடிவும் செய்யவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் தனது அமைச்சு அமெரிக்க அதிகாரிகளுடன் தற்போதுதான் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் தொடர்பான மேம்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். அவர்களின் சுயவிவரக் குறிப்பு மற்றும் சமீபத்திய சூழ்நிலையைப் பற்றி உள்துறை அமைச்சு அண்மையில்தான் படித்தது. மேலும் அவர்கள் மலேசிய மண்ணில் கால் பதிக்கும் கட்டத்தை நாங்கள் இன்னும் எட்டவில்லை என்று அவர் தெரிவித்தார். நேற்று இங்குள்ள பண்டார் துன் ரசாக் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற கேடிஎன் மடாணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர்கள் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் கடந்தகாலப் பதிவுகளைப் பார்ப்போம் என்று சைபுடின் மேலும் கூறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களின் நிலை குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். இதற்கிடையில், நாடு முழுவதும் 155 மண்டலங்களை அதிக ஆபத்துள்ள போதைப்பொருள் பகுதிகளாக (கே.பி.டி) உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார். போதைப் பொருள் நடவடிக்கைகளை குறைக்க தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் மூலம் அமைச்சு குறைக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது மேலும் கோலாலம்பூரில் எட்டு கே.பி.டி. மண்டலங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பண்டார் துன் ரசாக் ஆகும். பண்டார் துன் ரசாக் சிவப்பு உயர் அபாய நிலையில் இருந்து வெளியே வந்து தற்போது பச்சை நிலையில் இருப்பது ஒரு நல்ல விஷயம். எவ்வாறாயினும், இந்த நிலையைத் தக்கவைக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.