ஷா ஆலம், அக் 13- நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மலைச்சரிவுகளைச் சீரமைக்க 56 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கை, அறிக்கைத் தாக்கல், முன்னெச்சரிக்கை ஆகிய நடவடிக்கைகளையும் இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு இறுதியில் பத்தாங் காலியில் ஏற்பட்டதைப் போன்ற நிலச்சரிவு சம்பவம் நிகழாதிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி கெந்திங்-பத்தாங் காலி சாலையில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுது போக்கு தங்கும் விடுதி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் 31 பேர் உயிரிழந்தனர்.