கோலாலம்பூர், நவ 1- மொத்தம் 1 லட்சத்து 52,158 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மனித வளம் இல்லாததால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ள உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது என்றார்.
நாட்டில் ஏற்கனவே 18 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்காலிக வேலை வாய்ப்பு வருகை அனுமதி அட்டைகளில் (PLKS) உள்ளனர்.
என்று நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் சிவகுமார் பதில் அளித்தார்.
மறுசீரமைப்புத் திட்டமானது, முன்னர் ஆவணமற்ற 747,167 புலம்பெயர்ந்தோரைப் பதிவு செய்துள்ளது.
அவர்களுக்குப் புதிய பணி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம் மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும், உள்ளூர் பணியாளர்களை மறுதிறன் செய்வதற்கும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த சிவகுமார், உள்ளூர் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்கல், இயந்திரமயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றை தங்கள் செயல்பாடுகளில் பின்பற்ற ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசு தொடரும் என்றார்.
இது திறமையான தொழிலாளர் தேவையை அதிகரிக்கும், மேலும் உள்ளூர் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.