புத்ராஜெயா, நவ 21- வட மியன்மாரின் லவுக்கேங் பிராந்தியத்தில் அமைதியின்மை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அங்கு மொத்தம் 109 மலேசிய பிரஜைகள் சிக்கிக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அங்கு சிக்கியுள்ள மலேசியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப்படுவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சு, யாங்கூன் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் குன்மிங்கில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகம் மூலம் மியான்மர் வெளியுறவு அமைச்சு, சீன மக்கள் குடியரசு வாயிலாக மீட்புப் பணிகளை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைத்து வருகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களையும் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்யப்படு வருகின்றன என்று அது கூறியது.
இந்த முயற்சியில் உள்துறை அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்பும் நாடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் மோசடி வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு பலியாகும் மலேசிய குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை தேடும் மலேசியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படும் அதே வேளையில் வேலை வாய்ப்புகளின் தன்மையைச் சரிபார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உதவி தேவைப்படும் மியான்மரில் உள்ள மலேசியர்கள் யாங்கூனில் உள்ள மலேசியத் தூதரகத்தை 00 951 220 230 / 220 248 / 220 249 அல்லது 0720 2020 அலுவலகம் ) அல்லது [email protected] . மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்லாம்.