கோலாலம்பூர், நவ. 25- பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வளாகத்தில் நேற்று உள்துறை அமைச்சு நடத்திய சோதனையில் கம்யூனிச சித்தாந்தங்கள் இருப்பதாகக் நம்பப்படும் 8 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
அந்தப் புத்தகங்களின் விற்பனை குறித்து தகவல் கிடைத்ததையடுத்து அமைச்சின் கட்டுப்பாடு மற்றும் அமலாக்கப் பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
1984 ஆம் ஆண்டு அச்சக மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் அந்த வெளியீட்டின் விநியோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சட்டங்களை மீறுவதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு வெளியீடுகளையும் விசாரணைக்காக பறிமுதல் செய்வதற்கு இந்தச் சட்டம் அமலாக்கத் துறைக்கு உதவுகிறது என்று அமைச்சு குறிப்பிட்டது.
குறிப்பாக பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கூறுகளைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளியீடுகள் மற்றும் பொது அல்லது தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது உணர்வுகளைத் தூண்டும் வகையிலான வெளியீடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை நிறைவேற்ற உள்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளது.
இதுபோன்ற விரும்பத்தகாத வெளியீடுகள் தொடர்பான தகவல்களை 03-8000 8000 / 8889 3145, [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது www.moha.gov.my என்ற முகவரியில் தொடர்பு கொண்டு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .