ஷா ஆலம், டிச 17 – சிலாங்கூர் மலாய் பாரம்பரிய மற்றும் புராதனக் கழகத்தின் (பாடாட்) கீழ் செயல்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் பள்ளி விடுமுறை காலத்தில் தினசரி திறந்திருக்கும்.
இன்று தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அருங்காட்சியகங்கள் செயல்படும் என்று அந்த அமைப்பு தனது முகநூல் பதிவில் கூறியது.
பாடாட் அமைப்பின் மேற்பார்வையில் உள்ள ஆறு அருங்காட்சியகங்களில் ஷா ஆலமில் உள்ள சுல்தான் ஆலம் ஷா அருங்காட்சியகம், கோல லங்காட் ஜுக்ராவில் உள்ள இன்ஸ்தியு அருங்காட்சியகம் மற்றும் சபாக் பெர்ணம் அருங்காட்சியகம் ஆகியவையும் அடங்கும்.
கோல லங்காட்டில் உள்ள இஸ்தானா பண்டார், கோல சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தியில் உள்ள செஜாரா கோல சிலாங்கூர் வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் புக்கிட் மெலாவத்தியில் உள்ள பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகம் ஆகியவை இதர அருங்காட்சியங்களாகும்.
இந்த பாடாட் அமைப்பு முன்பு சிலாங்கூர் அருங்காட்சியக வாரியம் என்று அழைக்கப்பட்டது. கடந்த 1975 முதல் கண்காட்சி நடவடிக்கைகள், ஆராய்ச்சி, வெளியீடு மற்றும் சேகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பாக இது விளங்குகிறது.