]கிள்ளான், டிச. 21 – நீடித்த வளர்ச்சி இலக்குகளை (எஸ் டி.ஜி.) அடைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு சிலாங்கூரில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களையும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் வலியுறுத்தியுள்ளார்.
பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை அவசியமானதாகும் என்று நேற்று இங்குள்ள கே.எஸ்.எல். எஸ்ப்லனேட் ஹோட்டலில் நடைபெற்ற கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் நிலையான சமூக விருதுகள் 2023 நிகழ்வில் ஆற்றிய அதிகாரப்பூர்வ உரையில் அவர் கூறினார்.
கிள்ளான் நகராண்மைக் கழகமும் அதன் பங்களிப்பாளர்களும் நீடித்த வளர்ச்சி இலக்கின் உலகளாவிய நோக்கங்கள், திசைகள் மற்றும் இலக்குகளுடன் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான செயல்திறன் மற்றும் ஆற்றல்களை அதிகரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
இலக்குகளுக்கான பங்காளித்துவம் மீதான எஸ்.டி.ஜி. 17 க்கு ஏற்ப கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்களை நான் எதிர் பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
எஸ்.டி.ஜி.யின் இலக்கு எண் 17 என்பது நிலையான வளர்ச்சிக்கான செயல்படுத்தும் வழிமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய கூட்டாண்மைக்கு புத்துயிர் அளிப்பதைக் குறிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமைத் தொழில்நுட்பக் குழுவின் கீழ் பசுமைத் தொழில்நுட்ப சிறு மானியம் மற்றும் சுற்றுச்சூழல் சிறு மானியம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் பசுமை பணி இலக்கின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மாநில அரசு நிரூபித்துள்ளது என்று இங் குறிப்பிட்டார்.
உள்ளூர் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கும் இந்த மானியங்கள் அந்த அமைப்புகளுக்கு வழங்கப்படுகினறன என்றார் அவர்.