தங்காக், டிச 21- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவரும் அவரது உதவியாளரும் உயிரிழந்த வேளையில் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நெடுஞ்சாலையின்164.8 கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் தங்காக் ஓய்வுப் பகுதியின் நுழைவாயில் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து இன்று அதிகாலை 4.26 மணிக்கு தங்களுக்கு அழைப்பு கிடைத்தாக தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை கமாண்டர் ஜம்ரி அயோப் கூறினார்.
தங்காக் மற்றும் புக்கிட் காம்பீர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 18 உறுப்பினர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அவசர சேவை உதவிப் பிரிவு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
ஐந்த டன் இஸூசு ரக லோரியின் ஓட்டுநரும் உதவியாளரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவ்விருவரும் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு லாரி ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் சிகிச்சைக்காக தங்காக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.