கோலாலம்பூர், ஜன 1- பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சுங்கைவே சுயேச்சை வாணிக தொழில்பேட்டையில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாமர் அறையில் நேற்று மாலை 5.53 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் நால்வர் காயமடைந்தனர்.
உள்நாட்டு பிரஜைகளான 22 முதல் 52 வயது வரையிலான அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இந்த விபத்தில் முகமது அட்ஹாட் நோர் ஜாலி (வயது 22), ஜைபுல் அம்ருன் முகமது ஜஹார் (வயது 52), நிக் ஹப்சான் அலி (வயது 34), முகமது பவுஸி அப்துல் ரஹிம் (வயது 37) ஆகியோர் காயமுற்றதாக அவர் சொன்னார்.
தகவல் கிடைத்து மாலை 6.07 மணியளவில் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் அடைந்த போது அருகிலுள்ள கட்டிடத்திற்கும் தீ பரவியதைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார். பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 24 பேரடங்கிய குழுவினர் 44 நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று பெர்னாமாவிடம் அவர் குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்தில் 37 சதுர மீட்டர் அளவிலான அந்த மின்மாற்றி முற்றாக அழிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஃபாக்ருடின் அப்துல் ஹமிட், தீக்காயங்களுக்குள்ளான அந்த நால்வரின் உடல் நிலை சீராக உள்ளது என்றார்