ECONOMYYB ACTIVITIES

மேரு தொகுதியில் 1,400 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

கிள்ளான், ஜன 14-  இவ்வாண்டு முதல் வகுப்பில் சேரவுள்ள மேரு  சட்டமன்றத் தொகுதியிலுள்ள   சிலாங்கூர் சிறார் பாரம்பரிய நிதியின் (தாவாஸ்) 1,400 உறுப்பினர்கள்  பள்ளி நுழைவு உதவித் திட்டத்தின் கீழ்  பயன் பெறவுள்ளனர்.

மேரு மக்களை அணுகும் நோக்கில் இந்தத்  திட்டம்  அமல்படுத்தப்படுகிறது என்று  மேரு சட்டமன்ற சமூக சேவை மையத்தின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் அதிகாரி எஸ். சுந்தர் கூறினார்.

இந்த உதவிகளை பெற பெற்றோர்கள் இன்று வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால்  வேலை  அல்லது வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, இன்று வருவதற்கு  வாய்ப்பு இல்லாதவர்கள் பள்ளி தவணை தொடங்கும் முன்  மேரு தொகுதி சேவை மையத்திற்கு வந்து உதவிப் பொருள்களைப்  பெறலாம் என்றார் அவர்.

முன்னதாக, அவர்,  தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மாணவர்களிடம் பள்ளிப் பைகள், எழுதுபொருள் உபகரணங்கள், உணவுப் பாத்திரங்கள்  உள்ளிட்ட உதவிகளை  வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்துரைத்த 38 வயதான கலீஜா தேபாப் என்ற குடும்ப மாது,  தனக்கு இதுபோன்ற உதவி கிடைப்பது இது முதல் முறை இல்லையென்றும் தனது எட்டு பிள்ளைகளில் ஐந்து பேர் தாவாஸ்  உறுப்பினர்களாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதனிடையே,  தன் ஏழு வயது மகள்  பி.சுவந்தினிக்காக இந்த  உதவியைப் பெறுவது இதுவே முதல் முறை என்று ஆர்.வசந்தி (வயது 47)  என்ற குடும்ப மாது கூறினார்.

சிலாங்கூரின் மைந்தராக  இருப்பது அதிர்ஷ்டமானது. மாநில அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.  மாநில அரசின் இந்த உதவி மூலம் மார்ச் மாதத்தில் பள்ளி தவணைக்குத் தேவையான அனைத்து  ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் என்று அவர் சொன்னார்.


Pengarang :