கோலாலம்பூர், ஜன 20- உடலில் பலத்த தீக்காயங்களுடன் 60 வயது மூதாட்டி ஒருவர் கிளானா ஜெயாவில் சாலையோரம் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
நேற்று அதிகாலை 3.46 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.
இப்புகாரைத் தொடர்ந்து போலீஸ் ரோந்துக் காரும் டாமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியும் சம்பவம் நிகழ்ந்த ஜாலான் எஸ்.எஸ். 22 கிளானா ஜெயா பகுதிக்கு அனுப்பப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அம்மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையக நடவடிக்கை அறையை 03-79662222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.