SELANGOR

சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற உறுப்பினர்களாக 23 பேர் பதவியேற்பு- இரு இந்தியர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 23- சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற உறுப்பினர்களாக 23 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இம்மாதம் 19ஆம் தேதி சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற தலைமையத்தின் பூங்கா மாவார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வுக்கு மாவட்ட மன்றத் தலைவர் அஸ்மான் டாஹ்லான் தலைமை தாங்கினார்.

2024/2025ஆம் ஆண்டிற்கான இந்த நியமனத்தில் இந்திய சமூகம் சார்பில் புஷ்பா ராஜன் மற்றும் சதாசிவம் மனோகர் ஆகிய இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புஷ்பா அமானா கட்சியைப் பிரதிநிதிக்கும் வேளையில் பி.கே.ஆர். கட்சி சார்பில் சதாசிவம் பொறுப்பேற்றுள்ளார்.

ஈராண்டுத் தவணைக்கான இந்த நியமனத்தில் ஒன்பது உறுப்பினர்கள் புதிதாக இடம் பெற்றுள்ள வேளையில் எஞ்சிய 14 பேர் கடந்த தவணையின் போதும் மாவட்ட மன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களாவர்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் மாவட்ட மன்ற அந்துஸ்து கொண்ட ஒரே மன்றமாக சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் விளங்குகிறது. துரித வளர்ச்சி காரணமாக கோல லங்காட், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் உள்ளிட்ட மாவட்ட மன்றங்கள் அண்மைய ஆண்டுகளில் நகராண்மைக் கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டன.


Pengarang :