MEDIA STATEMENT

மகளைத் தாக்கி காயப்படுத்திய தந்தைக்கு ஏழு போதைப் பொருள் குற்றப்பதிவுகள்

சிரம்பான், ஜன 25- பதினேழு வயதுடைய தன் மகளை அடித்தும் உதைத்தும் காயப்படுத்திய புகாரின் பேரில் 47 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தவிர பாலியல்  வன்புணர்வு தொடர்பிலும் அந்த ஆடவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி ஹஸ்ரி முகமது கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி தன் தந்தையால் தாம் கற்பழிக்கப்பட்டதாக அப்பெண்  கூறியதாக கோல பிலா துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

தந்தையால் தாக்கப்பட்ட காரணத்தால் வலது தோள்பட்டை, தலையின் பின்புறம், வலது கை, உதடு ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்களுக்காக அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று  அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

நான்கு சகோதர, சகோதரிகளில் மூத்தவரான அப்பெண் தாய் தந்தையின் விவாகரத்துக்கு காரணமாக நான்கு வயது முதல் தாயாரின் பராமரிப்பில் இருந்துள்ளார்.கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் மீண்டும் தன் தந்தையுடன் வசிக்கத் தொடங்கியுள்ளார் என ஹஸ்ரி கூறினார்.

அந்த ஆடவர் போதைப் பொருள் தொடர்பில் ஏழு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளது  தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

அந்த ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணைக்காக இம்மாதம் 27ஆம் தேதி வரை  விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர். 

 


Pengarang :