NATIONAL

பிட்காயின் முதலீட்டு மோசடிக் கும்பலிடம் மூதாட்டி 115,000 வெள்ளியை இழந்தார்

சிரம்பான், பிப் 1- பிக்ட்காயின் முதலீட்டின் மூலம் பெரும் தொகையை
லாபமாக ஈட்டலாம் என்ற மூதாட்டி ஒருவரின் ஆசை பெரும்
ஏமாற்றத்தில் முடிந்தது. எக்ஸர்எக்ஸ் முதலீட்டு தளத்தின் வாயிலாக
மூதலீடு செய்த தனது சேமிப்புத் தொகையான 115,000 வெள்ளியை அவர்
முழுமையாக இழந்தார்.

பேஸ்புக்கில் வெளியான எக்ஸர்எக்ஸ் முதலீட்டுத் திட்டம் தொடர்பான
விளம்பரத்தால் இல்லத்தரசியான அந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி
ஈர்க்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்டப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வாட்ஸ்ஆப் மூலம் ஆடவர்
ஒருவரை தொடர்பு கொண்ட அந்த மூதாட்டி முதலீட்டு நோக்கத்திற்காகத்
தனது சேமிப்புத் தொகையான 115,000 வெள்ளியைக் கடந்தாண்டு டிசம்பர்
மாதம் 19 முதல் இவ்வாண்டு ஜனவரி 12ஆம் தேதி வரையிலான
காலக்கட்டத்தில் ஆறு பரிவர்த்தனைகள் மூலம் ஐந்து வங்கிக்
கணக்குகளுக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த முதலீட்டின் வாயிலாகக் கிடைத்த லாபம் தனது எக்ஸர்எக்ஸ்
செயலியில் சேர்க்கப்பட்ட போதிலும் கூடுதலாகப் பணம் செலுத்த
வேண்டும் என்ற கோரிக்கை காரணமாக அந்த லாபத் தொகையை
அம்மூதாட்டியினால் எடுக்க இயலாது போனது என்று அவர் அறிக்கை
ஒன்றில் சொன்னார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி கடந்த மாதம் 26ஆம் தேதி
இது குறித்து போலீசில் புகார் செய்ததாக அய்டி குறிப்பிட்டார்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின்
கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும்
தெரிவித்தார்.


Pengarang :