புத்ராஜெயா, பிப் 11 – மத்திய மண்டலத்திற்கான மடாணி ராக்யாட் திட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு உள்ள கோல சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மடாணி அரசு அறிமுகப்படுத்திய புதிய கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகளை உள்ளூர் சமூகம் அறிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த மடாணி நிகழ்வை, செயல்திறன் முன்னெடுப்பு ஒருங்கிணைப்பு பிரிவு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிலாங்கூர் அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளதாக அதன் செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
மத்திய அரசு அமைச்சுகள் மற்றும் மாநில அளவிலான துறைகளிடமிருந்து நேரடியாக சேவைகளை பெறுவதற்கான ஒரு தளமாக இந்த திட்டம் விளங்குகிறது. அதே நேரத்தில் பொது மக்களுக்கு சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான கருத்து மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.
மடாணி தொலை நோக்கு இலக்கிற்கேற்ப பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான தொடர்பை வளர்ப்பதோடு உறவுகளையும் மேம்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் உதவுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, அத்துடன் மக்கள் நலன், கூட்டரசு அமைப்புகள் மற்றும் குறிப்பாக சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படும்.
இந்த மடாணி ராக்யாட் திட்டத்தின் நிறைவு விழா பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் ல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.