கோலாலம்பூர், பிப் 11- சீனப் புத்தாண்டு பண்டிகையையொட்டி இன்று காலை 9 .00 மணி நிலவரப்படி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் நெரிசல் ஏதுமின்றியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஜாலான் டூத்தா டோல் சாவடி (வடக்கு தடம் ) மற்றும் சுங்கை பீசி டோல் சாவடி (தெற்கே தடம்) ஆகியவற்றில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் கோம்பாக் டோல் சாவடியில் (கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை ) வாகன எண்ணிக்கை சிறிது அதிகரித்து காணப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊடகத் தொடர்பாளர் கூறினார்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஜோகூர் பாலத்தின் சிங்கப்பூரில் இருந்து வரும் பகுதியில் நெரிசல் காணப்படுகிறது. இது தவிர இதர அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் சீராகச் செல்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
கோம்பாக் டோல் டோல் சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் போக்குவரத்து இன்னும் சீராக உள்ளது. பிளஸ் நெடுஞ்சாலையில் பேராக்கின் தாப்பாவில் இருந்து கோப்பெங் செல்லும் தடத்தின் 311.5 கிலோ மீட்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாக இடது தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
கே.எல்.-காரக் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1 (எல்.பி.டி.1) மற்றும் எல்.பி.டி.2 நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது என்றார் அவர்.
அதேபோல், பெந்தோங் டோல் சாவடியில் போக்குவரத்து சீராக உள்ளதோடு வாகன எண்ணிக்கையில் அதிகரிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வாகன நெரிசலைக் குறைப்பதற்காக பிளஸ் நெடுஞ்சாலையின் பல இடங்களில் ஸ்மார்ட் லேன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிளஸ் டிராபிக் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் கூறியது.