ஷா ஆலம், பிப் 14- மாநில அரசின் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதில் பாரம்பரிய கிராமத் தலைவர்களும் கிராம சமூக மேம்பாட்டு மன்றத்தின் (எம்.பி.கே.கே.) உறுப்பினர்களும் முக்கியப் பங்கினை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அரசின் உதவிகளும் சேவைகளும் சீரான முறையில் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தில் உள்ளடங்கியுள்ள உணர்வு முழுமையானது. ‘நமது சிலாங்கூருடன் இணைந்து முன்னேறுவோம்‘ என்ற கருப்பொருள் மாநிலத்திலுள்ள யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதை புலப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதில் முக்கியமானது என்னவென்றால் மாநில அரசு வழங்கும் ஆதரவு, அரவணைப்பு மற்றும் உதவிகள் சரியான இலக்கை அதாவது உதவித் தேவைப்படுவோரைச் சென்றடைய வேண்டும் என்பதாகும் என்று நேற்று இங்கு நடைபெற்ற எம்.பி.கே.கே. பாராட்டு நிகழ்வில் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிலையிலான சிறந்த பாரம்பரிய கிராமம், சிறந்த எம்.பி.கே.கே. சிறப்பு விருது, சிறந்த கிராமத் தலைவர் சிறப்பு விருதுகளை மந்திரி புசார் வழங்கினார்.
கடந்த 2020 முதல் 2021 காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப் பேரிடரின் போது கிராமத் தலைவர்களும் எம்.பி.கே.கே. உறுப்பினர்களும் அளப்பரிய சேவைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில எம்.பி.கே.கே. உறுப்பினர்கள் அடுத்த தவணைக்கு தேர்ந்தெடுக்கப்படாத போதிலும் அவர்கள் அனைவரும் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் சொன்னார்.