கோலாலம்பூர், பிப் 17- இங்குள்ள மஸ்ஜிட் ஜாமேக் மற்றும் பண்டாராயா இலகு ரயில நிலையங்களில் (எல்.ஆர்.டி.) இரயில் சேவையில் இடையூறு ஏற்படக் காரணமாக இருந்த ஹோட்டல் கட்டுமான திட்ட உரிமையாளர் மற்றும் மேம்பாட்டாளருக்கு எதிராக 3 கோடியே 80 லட்சம் வெள்ளி இழப்பீடு கோருவது உள்பட சட்ட நடவடிக்கைகளை பிராசாரான மலேசியா பெர்ஹாட் நிறுவனம் மேற்கொள்ளும்.
பல எல்.ஆர்.டி. மேம்பாதைகளில் ஏற்பட்ட பழுதுகளைச் சீரமைப்பது செய்வது மற்றும் இடைவழிச் சேவைக்கு பஸ்களை பயன்படுத்தியது ஆகியவற்றுக்கு உண்டான செலவின் அடிப்படையில் இந்த இழப்பீடு கோரப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இரயில் சேவை சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டப் பின்னரே இழப்பீடு கோருவது மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுவே அமைச்சுக்கு கிடைத்த உத்தரவாகும். இழப்பீட்டைப் பெறுவது போன்ற விஷங்களை முதலில் மேகொண்டு அதன் பின்னர் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் இதனால் கால விரயம் ஏற்பட்டு பயணிகளுக்கு பெரும் அசௌகர்யம் ஏற்படும். இந்த நிலையம் கடந்த 2023 பிப்வரி 27ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
பழுதுபார்ப்புப் பணிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு கடந்த டிசம்பரில் முற்றுப் பெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு கட்ட சோதனைகள், தர நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டப் பின்னர் இன்று இந்த தடம் போக்குவரத்துக்கு திறக்கப் படுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள பண்டராயா எல்.ஆர்.டி. நிலையத்தின் மறுதிறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.