NATIONAL

சாலை விபத்தில் நான்கு மாதக் கர்ப்பிணி உயிரிழப்பு

சிரம்பான், பிப் 20: நேற்று பிற்பகல் சிரம்பான்-தம்பின், பெக்கன் கோத்தா, கிலோமீட்டர் 37.8இல் நான்கு மாதக் கர்ப்பிணியான ஓராங் அஸ்லி பெண் ஏறி சென்ற மோட்டார் சைக்கிள், பல் கிளினிக் வேன் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

நானா தோணி  (32), தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவரது மகன் நோர்வின்சைசுல் நோர்சைஃபுல் (3) தலையில் காயம் ஏற்பட்டதாகவும், ரெம்பாவ் மாவட்டக் காவல்துறை தலைவர் டிஎஸ்பி ஹஸ்ரி முகமது தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் 28 வயது இளைய சகோதரர் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். அவர் சாலை சந்திப்பில் பாதையை மாற்றும் சமயம் கவனக்குறைவாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட வேன் மீது மோதியதாக அவர் கூறினார்.

மேல் சிகிச்சைக்காக நானா ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மாலை 4.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்று ஹஸ்ரி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :