கோலாலம்பூர், பிப் 25- செமினி 2, தாமான் பெலாங்கியில் உயிர் பறிபோகும் அளவுக்கு ஆடவர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்களுக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருபத்திரண்டு முதல் 52 வயது வரையிலான அவர்கள் அனைவருக்கும் எதிரானத் தடுப்புக்காவல் வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜாய்ட் ஹசான் இன்று இங்கு வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அந்த ஐவர் தவிர்த்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
23 மற்றும் 40 வயதுடைய அவ்விருவரும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் தொடர்பில் வாகனமோட்டி களிடமிருந்து இரு புகார்களைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
சாலை விபத்தைத் தொடர்ந்து 42வது காரோட்டியை காரிலிருந்து இழுத்து கைகைளைக் கட்டிய பொது மக்கள் அவரை அடித்துக் கொன்றதாக ஊடகங்கள் கடந்த வாரம் புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.
உணவு விநியோகிப்பாளர் மற்றும் இதர சில வாகனங்களை மோதிய பாதிக்கப்பட்ட நபர் தனது புரோட்டோன் சாகா காரில் அங்கிருந்து தப்ப முயன்ற போது கும்பல் ஒன்று அவரைத் துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.