கோலாலம்பூர், மார்ச் 16- காஸா பகுதியில் உள்ள அல்-நுசிராத் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலை மலேசிய அரசு கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
இஸ்ரேலின் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயமடைந்ததாக அமைச்சு கூறியது.
பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான அறக்கட்டளை நிதி மூலம் மலேசியர்கள் நன்கொடையாக வழங்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அப்பணியாளர்கள் தயாரான வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த வன்முறைச் செயல் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை அப்பட்டமாக மீறப்படுவதை புலப்படுத்துகிறது என்று அந்த அமைச்சு குறிப்பிட்டது.
பாலஸ்தீன மக்கள் மீதான இந்த தாக்குதல் அமைதி, பாதுகாப்பு மற்றும் அமைதியுடன் வாழ்வதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
முகாமில் உள்ள அனைவரும் அப்பாவி பாலஸ்தீனர்கள். அவர்கள் இஸ்ரேலிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கவில்லை. மாறாக, அவர்கள் சக பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் மட்டுமே வழங்குகின்றனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இவ்விவகாரத்தில் அனைத்துலக சமூகம் அவசரமாகவும் தீர்க்கமாகவும் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இஸ்ரேலிய ஆட்சியை பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி, அமைதி மற்றும் உரிமைகளைப் பெறுவதற்கான அவர்களின் முயற்சிகள் நனவாவதை உறுதிப்படுத்த பாலஸ்தீன மக்களுக்கு ஒருமித்த மற்றும் தார்மீக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.