MEDIA STATEMENT

செகி ஃப்ரெஷ் பேரங்காடிகள் உள்பட எட்டு இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், மார்ச் 24- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான  மாநில அரசின் மலிவு விற்பனை செகி ப்ரெஷ் பேரங்காடிகள் உள்பட எட்டு இடங்களில் இன்று நடைபெறவுள்ளது.

அவற்றில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் மூன்று இடங்களில் நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையும் அடங்கும்.

 கோழி, மீன், அரிசி, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருள்கள் மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் விற்பனை  இயக்கம் வாவாசான் பூச்சோங் கூடைப்பந்து மைதானம் (கின்ராரா), கம்போங் பெண்டாமார் பள்ளிவாசல் வளாகம் (கோலக் கிள்ளான்), சூராவ் டாருள் ஹிடாயா செக்சன் 7 (கோத்தா டாமன்சாரா) ஆகிய இங்களில் காலை 9.00 மணி தொடங்கி நடைபெறும்.

மேலும், செகி ஃப்ரெஷ் பேராங்காடியின் ஒத்துழைப்புடன் தாமான் அமானியா பத்துகேவேஸ், ஸ்ரீமூடா, ஜெராம், பண்டார் மக்கோத்தா பந்திங், அவானி பாங்கி ஆகிய இடங்களில் மலிவு விற்பனைக்கு பி.கே.பி.எஸ். ஏற்பாடு செய்துள்ளது.

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை  பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்குகிறது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை  எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :