NATIONAL

பீடோர் கே.கே.மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கண்காணிப்பு கேமராவில் பதிவு

ஈப்போ, மார்ச் 28 – பீடோர் அருகே ஜாலான் புருசேவிலுள்ள கே.கே.மார்ட்
கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்
அன்றையை தினம் அதிகாலை வேளையில் காரில் வந்த நபரே என
போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று விடிற்காலை 5.35 மணியளவில் லாலாமூவ் என்ற சிவப்பு நிற
எழுத்து பொறிக்கப்பட்ட கருமை நிற கார் ஒன்று சாலையோரம் நிற்பதை
அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
காட்டுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

அந்த காரிலிருந்து இறங்கிய நபர் (சந்தேகப்பேர்வழி) மண்ணெண்ணெய்
நிரப்பப்பட்ட கண்ணாடி போத்தலை கடையை நோக்கி வீசிவிட்டு
அங்கிருந்து அகன்றதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
அவர் சொன்னார்.

இந்த தாக்குதல் சம்பவம் அக்கடையின் ஊழியர்களால் கண்டு
பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை 8.49 மணியளவில் இது
குறித்து அக்கடையின் பெண் ஊழியர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்
என முகமது யுஸ்ரி முன்னதாகக் கூறியிருந்தார்.

சம்பவ இடத்தில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்ததோடு பட்டாசு
போன்ற பொருளும் காணப்பட்டது. மேலும் உடைந்த கண்ணாடித்
துண்டுகளில் மண்ணெண்ணெய் வாடையும் வீசியது.


Pengarang :