MEDIA STATEMENTNATIONAL

டாமன்சாராவில் நான்கு சக்கர இயக்க வாகனத்திற்கு எரியூட்டிய  நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஏப் 9-  நான்கு சக்கர இயக்க வாகனத்திற்கு எரியூட்டியதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டாமன்சாரா, கம்போங் சுங்கை காயு, ஜாலான் செரோஜாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

இரு ஆடவர்கள் அந்ந அடாதச் செயலைப் புரிந்தது  அப்பகுதியில் உள்ள சிசிடிவி எனப்படும்  கண்காணிப்பு  கேமரா மூலம் கண்டறியப் பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்  ஏசிபி ஷாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.

பின்னிரவு 12.36 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள்  பெட்ரோல் என நம்பப்படும் திரவத்தை அந்த வாகனம் மீது ஊற்றி தீயிட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தமக்கு யாரும் எதிரிகள் இல்லை என்பதோடு யார் மீதும் தாம் சந்தேகம் கொள்ளவில்லை என்று அந்த வாகனத்தின் உரிமையாளரான  56 வயது குத்தகையாளர்  போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை  மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனை சட்டத்தின் 435வது பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :