MEDIA STATEMENTNATIONAL

பிரேக் செயலிழந்த  குப்பை லோரி 14 வாகனங்களை மோதியது- கூட்டரசு நெடுஞ்சாலையில் சம்பவம்

ஷா ஆலம், ஏப் 10 – பிரேக் பழுதான குப்பை லோரி சாலை சமிஞை விளக்கில்  நின்று கொண்டிருந்த பதினான்கு வாகனங்களை மோதித் தள்ளியது.

கூட்டரசு சாலையில் நேற்று பிற்பகல்  1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 41 வயதான உள்ளூர் குப்பை லோரி ஓட்டுநர் உள்பட  யாரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு நேற்று பிற்பகல் 2.33 மணியளவில் தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் கூறினார்.

அந்த குப்பை லோரி  ஷா ஆலமில் இருந்து காப்பார் நோக்கி  சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து  நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

பிரேக் கோளாறு காரணமாக குப்பை லோரி ஒன்று  கூட்டரசு நெடுஞ்சாலை / ஷாபாடு நெடுஞ்சாலை  சமிஞை விளக்கில்  நின்று கொண்டிருந்த 14 வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தின் எதிரொலியாக  அந்த ஓட்டுநர் மீது சிறுநீர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அந்தச் சோதனையில்  தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளை அவர் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த லோரி  ஆய்வுக்காக கணினிமயமாக்கப்பட்ட வாகன சோதனை  மையத்திற்கு (புஸ்பகோம்) அனுப்பப்படும். மேலும் இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 42 (1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :