ஷா ஆலம், ஏப் 10 – நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினமான நேற்று செராஸ் 11வது மைல், நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே டீசல் எண்ணெய் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதை சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) வெற்றிகரமாக தடுத்தது.
லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தின் நீர் சேகரிப்பு இடத்திற்கு அருகில் இந்த மாசுபாடு கண்டறியப்பட்டதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள லுவாஸ் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றது. துர்நாற்றத்தை அடிப்டையாகக் கொண்டு அருகிலுள்ள தொழில் பேட்டையிலிருந்து அந்த மாசுபாடு உருவானது கண்டறியபட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எண்ணெய்க் கழிவுகள் சுங்கை லங்காட் ஆற்றில் கலப்பதைத் தடுக்க லுவாஸ் உடனடியாக 12 எண்ணெய் உறிஞ்சும் பொதிகள் மற்றும் தலா 50 கிலோ எடை கொண்ட இரு செயல்படுத்தப்பட்ட கார்பன் பைகள் மற்றும் தடுப்புகளை வைத்தது.
சுங்கை லங்காட்டில் ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும் துர்நாற்றம் மற்றும் எண்ணெய் கசிவுகள் பற்றிய தீவிர கண்காணிப்பையும் லுவாஸ் நடத்தியது. மாசுபாடு நிகழ்ந்த இடத்திற்கும் செராஸ் 11வது மைல் நீர் சுத்திகரிப்பு மையத்திற்கும் இடையிலான தூரம் சுமார் 400 மீட்டராகும்.
லுவாஸ் மேற்கொண்ட மேல் விசாரணையில் எண்ணெய் படிமங்கள் கசிந்த தற்கான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.