NATIONAL

பிரபலமான பத்து லஞ்சாங் நாசி தோமேதோ கடையில் தீ விபத்து

ஜார்ஜ் டவுன், ஏப்.17: பிளாட் தாமான் ஶ்ரீ டாமாய், ஜெலுதோங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பிரபலமாக இருந்த பத்து லஞ்சாங் நாசி தோமேதோ கடை உட்பட இரண்டு கடைகள் தீயில் எரிந்து நாசமானது.

இருப்பினும், காலை 10.35 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

தனது தரப்புக்கு காலை 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பினாங்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஆபரேஷன்ஸ் கமாண்டர் அசிலான் ஹாசன் கூறினார்.

“தீயணைப்புப் படையினர் வந்து பார்த்தபோது, இரண்டு கடைகளிலும் தீ கொழுந்துவிட்டு எரிவது கண்டுபிடிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளும் 70 சதவீதம் எரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“இச்சம்பவத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஏழு நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்ததாக அவர் கூறினார்.

சம்பவத்தின் போது நாசி தோமேதோ கடையில் இரண்டு தொழிலாளர்கள் விற்பனைப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்ததாகவும், ஐடில்பித்ரி விடுமுறைக்குப் பின்னர் நேற்றுதான் கடை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :