NATIONAL

ஆறு மாதக் குழந்தை படுகொலை- விசாரணைக்காகத் தந்தை தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஏப் 17-சிலாங்கூர், பெரேனோங்கில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பு ஒன்றில் கடந்த திங்கள்கிழமை தனது ஆறு மாதக்
குழந்தையை படுகொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை
போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தைந்து வயதுடைய அந்த சந்தேக நபர் காஜாங்
மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் அன்றைய தினம் இரவு மணி
11.30 அளவில் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட துணைப்
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது நாசீர் ட்ராஹ்மான்
கூறினார்.

பெரேனாங், பண்டார் தாசேக் கெசுமாவில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் தனது குழந்தை சுயநினைவிழந்தது தொடர்பில் அவ்வாடவர்
காலை 8.52 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார்.

அந்த குழந்தையின் உடலில் எந்த காயமும் காணப்படவில்லை. எனினும்,
சவப்பரிசோதனையில் அக்குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது
தெரிய வந்தது. அந்த காயம் விபத்தினால் ஏற்பட்டது அல்ல என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஷாபு வகை போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும்
அந்த ஆடவரை விசாரணைக்காக எதிர்வரும் 22ஆம் தேதி வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில்
தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :