NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல்-கெஅடிலான் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குநராக இஸூவான் காசிம் நியமனம்

ஷா ஆலம், ஏப் 23- விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு
இடைத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தேர்தல்
இயக்குநராக சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவுத்
தலைவரும் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினருமான முகமது
இஸூவான் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவை வழங்குவதற்காக தொகுதியின்
பல்வேறு இடங்களில் தனது உறுப்பினர்களை இளைஞர் பிரிவு
களமிறக்கும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு அறிக்கை
ஒன்றில் கூறியது.

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கும் பிரசாரத்தின் போது
பல்லினங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு
ஏதுவாக முக்கிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும் என்று அது
தெரிவித்தது.

பொது மக்களுக்கு தகவல்களைப் பரப்புவதில் மேம்பாடு, வட்டார
விஷயங்கள் மற்றும் தேசிய நிலையிலான விவகாரங்கள் முதன்மை
இலக்காக இருக்கும். குறிப்பாக சமூக ஒற்றுமை, பொருளாதார
அடைவுநிலை மற்றும் மடாணி அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்து
விரிவாக எடுத்துரைக்கப்படும் என்ற அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அதோடு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் மற்றும் பொய்ப்
பிரசாரங்களை முறியடிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.
வழக்கம் போல் இந்த பிரசார நடவடிக்கைகள் அரசாங்க இயந்திரத்தின்
உதவியின்றி சொந்தமாக மேற்கொள்ளப்படும் என அப்பிரிவு கூறியது.

கோல குபு பாருவிலுள்ள இளைஞர்கள் பிரசாரங்களை நியாயமான மற்றும்
முதிர்ச்சியான முறையில் மதிப்பீடு செய்து சரியான முடிவை எடுப்பார்கள்
என தாங்கள் நம்புவதாகவும் அது தெரிவித்தது.

கோல குபு பாரு இடைத் தேர்தல் எதிர்வரும் மே 11ஆம் தேதி
நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் எதிர்வரும் 27ஆம் தேதியும் முதல்
கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும்.


Pengarang :