கோலாலம்பூர், மே 22 – ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் மலேசியாவின் சார்பில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கலந்து கொள்கிறார்.
ஈரானின் இடைக்கால அதிபர் முகமது மொக்பரை நேற்று தொடர்பு கொண்ட போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
கடந்த 19ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பலியானது குறித்து அன்வார் அவரிடம் இரங்கல் தெரிவித்தார்.
மறைந்த ஜனாதிபதி ரைசியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மூத்த அமைச்சரை (முகமது) ஈரானுக்கு மலேசியா அனுப்பும் என்று நான் கூறினேன்.
மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருடன் கடந்த ஆண்டு நியூயார்க் மற்றும் ரியாத்தில் நான் நடத்திய இரண்டு சந்திப்புகளையும் நினைவு கூர்ந்தேன். மேலும் மறைந்த அதிபரின் தலைமையில் ஈரானுக்கு மலேசியா செய்த வாக்குறுதிகளை தொடரும் என்று மொக்பருக்கு உறுதியளித்தேன் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
கடந்த 19ஆம் தேதி ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் உள்ள அணைக்கட்டின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட ஆறு பேருடன் திரும்பிக் கொண்டிருந்த ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி ஐந்து நாள் பொது துக்கக் காலத்தை அறிவித்து ஈரானின் துணை அதிபராக இருக்கும் மொக்பரை இடைக்கால அதிபராக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
அன்வாருடனான தொலைபேசி உரையாடலின் போது அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக மலேசியாவுக்கு மொக்பார் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் இரு நாடுகளும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மிகவும் மதிக்கும் விவேக பங்காளிகள் என்பதையும் வலியுறுத்தினார்.