ANTARABANGSA

ஹோட்டலின் 21 மாடியிலிருந்து விழுந்து உயர்கல்வி மாணவி மரணம்- போலீஸ் விசாரணை

ஜோர்ஜ் டவுன், மே 23- இங்குள்ள தஞ்சோங் பூங்காவில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றின் 21 மாடியிலிருந்து தனியார் உயர் கல்விக் கூட மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மாணவியின் உடல் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் கண்ட பொது மக்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.45 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த 24 வயது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை உறுதிப் படுத்தியதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் அந்த ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இன்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண்ணுடன் தங்கியிருந்த 24 வயது ஆடவரிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த மாணவியின் உடல் சவப்பரிசோனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.


Pengarang :