குவாந்தான், ஜூன் 8- பெல்டா புக்கிட் சாகுவில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகே சாலையைக் கடந்த எருமை மீது இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் முகமது தாங்தாவி முகமது அலி (வயது21) விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் பூசு கூறினார்.
இவ்விபத்தில் சிக்கிய 20 வயதுடைய மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புக்கிட் கோவிலிருந்து புக்கிட் சாகு நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்விரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு எருமை மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1887ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக வான் முகமது ஜஹாரி கூறினார்.