MEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல்- ஒன்பது வாக்குச் சாவடிகள் இன்று காலை திறக்கப்பட்டன

நிபோங் திபால், ஜூலை 6- இன்று நடைபெறும் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு 65 வாக்களிப்பு மையங்களை உட்படுத்திய ஒன்பது வாக்குச் சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்கு ஏக காலத்தில் திறக்கப்பட்டன.

தாசேக் தேசியப் பள்ளி, பூன் பெங் சீன ஆரம்பப் பள்ளி, பண்டார் தாசேக் முத்தியாரா தேசியப் பள்ளி, ஸ்ரீ தாசேக் தேசியப் பள்ளி, சுங்கை டூரி தேசியப் பள்ளி, துன் சைட் சே பராப்பா தேசியப் பள்ளி, சுங்கை பாக்காப், ஜாவி தேசியப் பள்ளி மற்றும் சுங்கை கெச்சில் தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் அந்த ஒன்பது வாக்குச் சாவடிகளும் செயல்படுகின்றன.

அனைத்து வாக்குச் சாவடிகளும் இன்று மாலை 6.00 மணிக்கு மூடப்படும். வாக்குகளை மொத்தமாக கணக்கிடும் பணி தாமான் டேசா ஜாவியில் உள்ள ஜாவி சமூக மண்டபத்தில் நடைபெறும்.

இத்தொகுதியில் உள்ள மொத்தம் 39,151 வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்று வாக்களிக்கவுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலை நடத்தும் பணியில் 552 பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதே வேளையில் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் காவல் துறையைச் சேர்ந்த 800 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் ஜோஹாரி அரிபினும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அபிடின் இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர். 

சுங்கைப் பாக்காப்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :