சுக்காய், ஜூலை 14- ஆறு மற்றும் ஏழு வயதுடைய தங்கள் பிள்ளைகளைச் சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் ஜாலான் ஜபோர் குபோரில் உள்ள வீட்டில் அவ்விருவரையும் நேற்றிரவு 8.00 மணிக்கு தாங்கள் கைது செய்ததாக கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹன்யான் ரம்லான் கூறினார்.
இருபத்தாறு வயதான அப்பெண் அச்சிறார்களின் சொந்த தாய் என்றும் 30 வயதான ஆடவர் அவர்களின் வளர்ப்புத் தந்தை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் மாலை 5.00 மணியளவில் வீட்டின் முன் அந்த சிறுவனையும் அவனது தங்கையையும் சந்தேக நபர்கள் அடித்து துன்புறுத்துவதைக் கண்ட பொது மக்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவ்விரு சிறார்களும் மருத்துவப் பரிசோதனைக்காக கெமமான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல் முழுவதும் புதிய மற்றும் பழைய காயத் தழும்புகள் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அவ்விறு சிறார்களும் தற்போது சமூக நலத் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
அச்சிறார்களின் தாயும் வளர்ப்புத் தந்தையும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின் கீழ் இன்று விசாரணைக்கு தடுத்து வைக்கப்படுவர் என்றார் அவர்.