ஷா ஆலம், ஆக 2- ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஸிஸா சைட் ஜைன் சிறிது நேரத்திற்கு முன் என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் காலமானார்.
இந்த தகவலை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மூலம் உறுதிப்படுத்தினார். அன்னாரின் மறைவுக்கு அவர் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்கோத்தா உறுப்பினர் காலமான செய்தியை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன் அணுகுவதற்கும் அன்பு செய்வதற்கும் எளிதான ஒரு தலைவராக இருந்த உம்மி என அழைக்கப்படும் டத்தோ ஷரிபாவின் மறைவு மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநிலத்திற்கு குறிப்பாக மக்கோத்தா தொகுதிக்கு அவர் ஆற்றிய சேவையும் அர்ப்பணிப்பும் என்றும் மறக்கப்படாது. இறந்தவரின் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அப்பதிவில் மேலும் தெரிவித்தார்.
அம்னோ குளுவாங் மகளிர் தலைவியான 63 வயதான ஷரிபா அஸிஸா, உள் இரத்தக் கசிவு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்பு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் மக்கோத்தா தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.