புத்ராஜெயா, ஆக. 18- இளம் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் ஜோதிடர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பத்து நான்கு வயதுடைய அந்த உள்நாட்டு ஆடவர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் பூச்சோங்கில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.
தாம் பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்டப் பெண் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 1.54 மணியளவில் புகார் செய்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் இப்புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக க் கூறிய அவர், இதன் தொடர்பான விசாரணைக்காக அவ்வாடவர் வரும் புதன் கிழமை வரை ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
தனது எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு உரிய பரிகாரம் செய்வதற்கும் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஆன அந்த ஜோதிடரை அப்பெண் அணுகியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாதிக்கப்பட்ட அந்த 24 வயதுப் பெண், கடந்த ஓராண்டு காலமாக தாம் அந்த ஜோதிடரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்ததாகக் கூறினார்.
அந்த ஜோதிடர் சமூக ஊடங்களில் வெளியிட்ட சேவைகள் தொடர்பான விபரங்களால் கவரப்பட்டு தனது தலைவிதியை மாற்றும் நோக்கில் அவரை அணுகியதாக லிண்டா என்ற அப்பெண் தெரிவித்தார்.