மலேசிய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத் தடையை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இது மக்களாட்சி நாட்டின் முறையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தேர்தல் ஆணையத்தின் செயலாளர், டத்தோ அப்துல் கானி சாலே ஊடக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டில் தேர்தல் வழிமுறைகள் நேர்மையாகவும் நீதியாகவும் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 28 மார்ச்சில் நடைபெற்ற 773-வது தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வெளிப்படையாக இல்லை, மேலும் மக்களாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கவில்லை. இந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மிக முக்கியம். இதனைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களை அடையாளம் காண முடியும்.
மேலும் இப்பட்டியல் புதிய வாக்காளர்கள் மட்டுமில்லாமல் தொகுதி மாறிச் செல்லும் வாக்காளர்களின் விவரங்களும் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் கண்டிப்பாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதல் வாக்காளர் பட்டியல் இல்லாவிடில் சட்டவிரோத வாக்காளர்களை சில தரப்பினர் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. குவாந்தான் நாடாளுமன்ற தொகுதியில் பல அடையாளம் தெரியாத நபர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபுஸியா சாலே
குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர்