ஷா ஆலம், மே 5:
பாக்காத்தான் கூட்டணி கட்சிகள் ஆளும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் தேவையில்லை. மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்ற வதந்திகளை முற்றிலும் மறுத்தார்.
” மாநில ஆட்சிக் குழு எப்போதும் போல சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறோம், எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அம்னோவுடன் எந்த ஒரு கூட்டணியும் வைக்க மாட்டோம். மேலும் மாநில ஆட்சியை கவிழ்க்க எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்,” என்று இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறினார்.
இஸ்கண்டரின் நிலையை இன்னொரு ஆட்சிக் குழு உறுப்பினரான ஸைடி அப்துல் தாலிப் உறுதிப்படுத்தினார். மேலும் கூறுகையில் மக்களின் 13வது பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு வெற்றி அளித்ததை தொடர்ந்து மாநில நிர்வாகம் தொடர வேண்டும். ஸைடி அப்துல் தாலிப் மாநில மந்திரி பெசாரை வரவேற்க கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் கெஅடிலான், ஜசெக மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் கூட்டணியாக போட்டியிட்டு 44 சட்ட மன்றங்களை வெற்றி பெற்றது.