கோலா லம்பூர், ஜூலை 14:
சுங்கை பூலோ-காஜாங் இரண்டாம் கட்ட இலகு இரயில் சேவை எதிர் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாக காஜாங்கில் இரயில் சேவை மேலும் மேம்படுத்தப்படும்.
இந்த இரண்டாம் கட்ட சேவையில் மொத்தம் 19 நிறுத்துமிடங்கள், 9.5 கிலோமீட்டர் தூரத்தில் பாதாள இரயில் பாதை மற்றும் 20.5 கிலோமீட்டர் அடுக்கு இரயில் பாதை போன்ற அதிநவீன தொழில் நுட்பத்திறன் கொண்டு செயல்பட இருப்பதாக எஸ்பிகே எம்ஆர்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மார்க்ஸ் காராகாஸியன் தெரிவித்தார்.
” சுங்கை பூலோ-காஜாங் இரண்டாம் கட்ட இலகு இரயில் சேவை, 51 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பயணிகள் கோலா லம்பூரின் தங்க முக்கோணத்திற்கு மிக எளிதாக செல்ல எம்ஆர்டி சேவையை பயன்படுத்தலாம்,” என்று விவரித்தார்.
மேற்கண்ட விவரங்களை, நேற்று லீ மெரீடியன் தங்கும் விடுதியில் நடந்த தகவல் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் போது இப்படி கூறினார்.
இதனிடையே, எம்ஆர்டி சேவை தொடங்கிய பிறகு, இந்த பாதை நெடுகிலும் வாழும் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக தொடங்கும் போது, ஏழு நிலையங்களில் வாகன நிறுத்துமிட சேவையும் உள்ளது என்றார். தாமான் மலூரி, தாமான் மீடா, தாமான் சன்தேக்ஸ், பண்டார் துன் ஹூசேன் ஓன், புக்கிட் டுக்கோங், சுங்கை ஜெர்னே மற்றும் பீலியோ டமன்சாரா போன்ற நிலையங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்