ஷா ஆலம், செப்டம்பர் 4:
நேற்று வட கொரியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது என்று விஸ்மா புத்ராவின் அறிக்கை கூறுகிறது. வட கொரியாவின் ஆறாவது பரிசோதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிரானது. இந்த நடவடிக்கை உலக அமைதிக்கும் மற்றும் பாதுகாப்புக்கும் மிரட்டலாக உள்ளது என்று விஸ்மா புத்ரா கூறியது.
” கடந்த 2006-இல் இருந்து ஆறாவது முறையாக வட கொரியா பரிசோதனை நடத்திவிட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அவமதிக்கும் செயலாகும். மலேசியா வட கொரியாவின் நடவடிக்கையை கண்டு வருத்தம் அடைகிறது. இதனால் கொரிய தீபகற்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் பதற்ற நிலை ஏற்படும்,” என்று கூறியது.
மேலும் தனது அறிக்கையில், மலேசியா வட கொரியாவை பரிசோதனைகளை நிறுத்துமாறு கோரி உள்ளது.
விஸ்மா புத்ராவின் அறிக்கையில் மலேசியா, வட கொரியா வட்டார மற்றும் அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
#கேஜிஎஸ்