கோலா லம்பூர், அக்டோபர் 23:
பிரபல வணிகரான ஜோ லோ அல்லது லாவ் தேக் ஜோவை கண்டுபிடிக்க மலேசிய அரச காவல்துறை மற்றும் அனைத்துலக காவல்துறை (இண்டர்போல்) இடையே ஒத்துழைப்பு எந்த அளவுக்கு உள்ளது என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று காலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் அமீடி இண்டர்போலுக்கு ஜோ லோவை பற்றி விவரங்கள் வேண்டி விண்ணப்பம் செய்து விட்டதாக கூறியதை தொட்டு அஸ்மின் அலி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
அஸ்மின் அலி மேலும் பேசுகையில், மலேசிய காவல்துறை இண்டர்போலிடம் ஒருவரை கைது மற்றும் விசாரணை தொடர்பாக உதவி பெறலாம் என்று விவரித்தார். சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை ஜோ லோவை பற்றி இண்டர்போலிடம் உதவி பெறும் என்றும் அனைத்துலக ரீதியாக பல்வேறு புகார்களை பெற்றுள்ளதாக கூறியது.
” என்னுடைய கேள்வி, ஜோ லோவின் விவகாரத்தில் மலேசிய காவல்துறையின் நிலைப்பாடு என்ன? மலேசியாவில் மிகப் பெரிய ஊழலான 1எம்டிபி சம்பந்தமாக விசாரணை நடத்த ஜோ லோவை கைது செய்து மலேசியாவிற்கு கொண்டு வர மலேசிய காவல்துறை இண்டர்போலிடம் உதவி கேட்டார்களா?” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
#கெஜிஎஸ்