ஷா ஆலம், ஜூன் 10:
தேசிய விசுவாச இயக்கம் (பேட்ரியோட்), அரசாங்க அதிகாரிகள் அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோ ஏற்பாடு செய்யும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளது. பேட்ரியோடின் தலைவர் பிரிகேட் ஜெனரல் (ஓய்வுபெற்ற ) டத்தோ முகமட் அர்ஷாட் ராஜி கூறுகையில், இதன் மூலம் பதவி துஷ்பிரயோகம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்களின் பொறுப்புக்கு ஒவ்வாத செயல்பாடுகளை தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
” அரசாங்க இலாகாகளின் தலைவர்களும் தமது பணியாளர்களுக்கு பொறுப்புகள் தொடர்பில் ஆணை வெளியிடப்பட வேண்டும். முதலில், அமைச்சர்கள் தங்களின் நிகழ்ச்சிகளில் கூட்டத்தை நிரப்ப அரசு பணியாளர்களை அழைப்பு விடுக்கிறார்களா என்று பார்ப்போம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, விவசாய அமைச்சர் சாலாஹூடின் ஆயோப் தமது அரசியல் நிகழ்ச்சிகளில் அரசு பணியாளர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளதை முகமட் அர்ஷாட் கூறினார்.