கோத்தா கினபாலு, செப்.24-
தொழில்துறை புரட்சி 4.0 காரணமாகத் தோன்றக்கூடிய வேலை வாய்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் தொழிலாளர்களின் திறனாற்றலை மேம்படுத்துவதற்கு ஏற்ப நாட்டின் கல்வி முறை அமைந்திருக்க வேண்டும் என்று மனித வள துறை துணையமைச்சர் டத்தோ மாஹ்ஃபுஸ் ஓமார் கூறினார்.
4.0 தொழில்துறை புரட்சிக்கு ஏற்ப கல்வியின் உள்ளடக்கம், கற்பித்தல், கற்பிப்போர் மற்றும் கல்வி நிர்வாகம் ஆகிய முக்கிய அம்சங்களில் முழுமையான மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றார் அவர்.
“உள்ளடக்கத்தில் தொழில்நுட்ப கல்வியில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பாடத் திட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பிட்ட திறனில் அதிக கவனம் செலுத்தப்படுவதோடு புதிய உள்ளடக்கமும் சேர்க்கப்பட வேண்டும். எனவே, மாறி வரும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய கல்வி திட்டம் மேம்படுத்தப்படுவது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்” என்றார் அவர்.
4.0 தொழில்துறை புரட்சி யுகத்தில் அனைத்து வேலைகளுக்கும் புத்தாக்க சிந்தனை ஆற்றல் தேவைப்படும். எனவே, அனைத்து துறை பட்டதாரி மாணவர்களும் புத்தாக்க சிந்தனை கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டத்தோ மாஹ்ஃபுஸ் கூறினார்.