கிள்ளான், செப்.24-
சட்டவிரோத நெகிழி இறக்குமதி நிறுவனத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தின் கீழ் மாநில சட்டப்பூர்வ நிறுவனமாக்கும் விண்ணப்பத்தை அங்கீகரிக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் வன்மையாக மறுத்தார்.
அனுமதியின்றி நடத்தப்படும் தொழிற்சாலைகளை நிபந்தனைகளை கடைபிடிக்கும் அமலாக்க நடவடிக்கை திட்டம் மூலம் சட்டப்பூர்வமானவையாக மாற்றும் இயக்கம் இவ்வாண்டு அக்டோபர் முதல் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
“இந்தத் திட்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளனர். உண்மையில், சட்டவிரோதமான நெகிழி கழிவுப் பொருள் இறக்குமதி தொழிற்சாலைகள் இவற்றுக்கான அனுமதியை சுற்றுச் சூழல் இலாகாவிடமிருந்துதான் பெற வேண்டும்” என்றார் அவர்.
அந்த இலாகாவிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே ஊராட்சி மன்றத்தின் அனுமதிக்கு அவை விண்ணப்பிக்க வேண்டும். இதற்கும் மாநில அரசு மேற்கொள்ளவிருக்கும் சட்டப்பூர்வமானதாக்கும் திட்டத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார்.